Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திடக்கழிவு மேலாண்மை; மாநகராட்சிக்கு சவால்

திடக்கழிவு மேலாண்மை; மாநகராட்சிக்கு சவால்

திடக்கழிவு மேலாண்மை; மாநகராட்சிக்கு சவால்

திடக்கழிவு மேலாண்மை; மாநகராட்சிக்கு சவால்

ADDED : ஜூன் 05, 2025 01:36 AM


Google News
''நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பெற்றிருக்கிறது திருப்பூர்'' என்கிறது சமீபத்திய ஆய்வு. மாவட்டம் முழுக்க, கிட்டத்தட்ட, 30 லட்சத்துக்கும் மேல் மக்கள் பரவியிருக்கின்றனர். இதில், 16 லட்சம் மக்களை உள்ளடக்கியிருக்கிறது திருப்பூர் மாநகராட்சி.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசின், சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வீடு, பொருளாதார வளர்ச்சி, தரமான, தடையில்லா தொலைத்தொடர்பு, நெரிசல் இல்லாத பொது போக்குவரத்து, நீர் சிக்கனம், குறைவான எரிபொருள் பயன்பாடு போன்றவை இருக்க வேண்டும். குறிப்பாக, திடமான திடக்கழிவு மேலாண்மை திட்டம், மாசு இல்லாத நகரம், சுகாதார வசதி, குப்பையில்லா வீதிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால், திடக்கழிவு மேலாண்மை திட்டம்; குப்பை, கழிவுகள் அகற்றம் என்பது தான், திருப்பூர் மாநகராட்சி எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் சவால். சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பையை, ஆங்காங்கே உள்ள பாறைக்குழிகள் உள்வாங்குகின்றன. இது, நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமும் நன்கு உணர்ந்திருக்கிறது.

'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், மேயர் தினேஷ்குமார் தெரிவித்த கருத்துகள்:

பாறைக்குழியில் குப்பை கொட்டுவது என்பது, திருப்பூரில், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. திருப்பூர், கோவை மாவட்டத்தை உள்ளடக்கி, மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து, பூர்வாங்கப் பணியை துவக்கியிருக்கிறது, தமிழக அரசு.

710 டன் குப்பைகள்தினமும் சேகரிப்பு


திருப்பூரில், தினமும், 710 முதல் 715 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படுகிறது. இதில், 200 மெட்ரிக் டன் மக்கும் குப்பையை சுத்திகரிப்பு செய்து, 'பயோ காஸ்' உற்பத்தி செய்வதற்கான பணி ஆணை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம், சமூக பொறுப்புடன் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

இது, 16 லட்சம் மக்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்னை; தினமும் சேகரிக்க கூடிய குப்பையை அகற்ற வேண்டியது மாநகராட்சியின் கடமை. கடந்த, 9 மாதமாக பாறைக்குழியில் குப்பைக் கொட்டப்பட்டு வருகிறது; 2, 3 நாட்களில் பாறைக்குழி நிரம்பி விடும். அதனை மூடி, பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க இருக்கிறோம். பாறைக்குழியை நிரப்பிய பெருமையை, தக்க வைத்துக் கொள்வதற்காக தான் சிலர் போராட்டம் நடத்தினர்.

காலம் காலமாகஇப்படித்தானே!


'குப்பை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என பல வகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூரில் காலம், காலமாக இருக்க கூடிய பிரச்னை இது. மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லிவிட்டு செல்லலாம்.

ஆனால், திருப்பூரில் குப்பை கொட்டுவதற்கு இடமில்லை; தரம் பிரிக்கும் குப்பையை எங்கு கொண்டு போய் கொட்டுவது? குப்பை மேலாண்மையை சரி செய்ய கால அவகாசம் தேவை.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us