Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாறைக்குழியில் குப்பை குவியல்! மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படையினர் ஆய்வு

பாறைக்குழியில் குப்பை குவியல்! மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படையினர் ஆய்வு

பாறைக்குழியில் குப்பை குவியல்! மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படையினர் ஆய்வு

பாறைக்குழியில் குப்பை குவியல்! மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படையினர் ஆய்வு

UPDATED : செப் 16, 2025 12:13 AMADDED : செப் 15, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக்கழிவு கொட்டப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நீர், நிலம், காற்று மாசு குறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அலுவலர்கள் ஆய்வுப்பணி துவக்கினர்.

திருப்பூர் மாநகராட்சி உட்பட ஊரகப்பகுதிகளில் குவியும் குப்பைகளை கொட்டுவதற்கும், அதை தரம் பிரித்து அகற்றுவதற்கான கட்டமைப்பு இல்லை; திடக்கழிவு மேலாண்மை என்பது, பெயரளவில் கூட இல்லை. திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, தினசரி சேகரமாகும், 700 முதல், 800 டன் குப்பையை கொட்டுவதற்கு, காலவாதியான, கைவிடப்பட்ட பாறைக்குழிகளை தான், மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.இருப்பினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதில் தொடர் தொய்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், 'பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டப்படுவதால், சுகாதாரகேடு ஏற்படுகிறது' என பொதுமக்களும், தன்னார்வ அமைப்பினரும் கூறி வந்தனர். 'அறிவியல் ரீதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தான், பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டப்படுகிறது' என மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்து வருகிறது.இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் ஆய்வகத்தை சேர்ந்த குழுவினர், நேற்று, முதலிபாளையம் பாறைக்குழி பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

நீர், மண் ஆகியவற்றை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.பறக்கும்படை அலுவலர்கள் கூறுகையில்,'பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதாரகேடு ஏற்படுகிறது, என்ற புகார் அடிப்படையில் காற்றின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்கான ஆய்வுப்பணியை துவக்கியுள்ளோம். இதுதொடர்பாக, எங்கெங்கு உபகரணம் வைப்பது உள்ளிட்ட அடிப்படை முதற்கட்டப் பணிகளை துவக்கியிருக்கிறோம்,' என்றார்.Image 1469777

சுட்டிக்காட்டிய 'தினமலர்'


திருப்பூரில், பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தீர்வுக்குரிய எந்தவொரு பணிகளும் முழுமைப் பெற்றதாக தெரியவில்லை. திரும்ப திரும்ப ஒரே பிரச்னையை தான், பேசி வருகின்றனர். இந்நிலையல், குப்பைக் கொட்டப்பட்ட பாறைக்குழிகள் உள்ள இடம், அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், நிலத்தடி நீரை சேகரித்து அதை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், மண் பரிசோதனை செய்து, மண் வளம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் உதவியுடன், குப்பைக் கொட்டப்பட்ட பாறைக்குழி உள்ள இடங்கள், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள காற்றின் மாசு அளவை கண்டறிய வேண்டும். அவ்வாறு, நீர், நிலம், காற்று மாசுப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான மாற்று திட்டத்தை செயல்படுத்தலாம் என, கடந்த 6ம் தேதி 'தினமலர்' நாளிதழில், 'குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்வது எப்போது?' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, இக்கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பலரும் சம்மந்தப்பட்ட துறையினருக்கு மனு வழங்கினர். விளைவாக, பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பைக் கழிவால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மாசுகட்டுப்பாடு வாரியம் துவங்கியிருக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us