/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'நிட்பேர்' கண்காட்சி; ரூ.250 கோடிக்கு விசாரணை 'நிட்பேர்' கண்காட்சி; ரூ.250 கோடிக்கு விசாரணை
'நிட்பேர்' கண்காட்சி; ரூ.250 கோடிக்கு விசாரணை
'நிட்பேர்' கண்காட்சி; ரூ.250 கோடிக்கு விசாரணை
'நிட்பேர்' கண்காட்சி; ரூ.250 கோடிக்கு விசாரணை
ADDED : செப் 20, 2025 08:09 AM

திருப்பூர்; 'நிட்பேர்' கண்காட்சியில், மூன்று நாட்களில், 250 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளதாக, ஐ.கே.எப்., அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இந்திய சர்வதேச நிட்பேர் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 52வது இந்திய சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, 17 ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, சேலம், கரூர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலிருந்தும் நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்திருந்தன. உலக அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக முகவர்கள்; தொழில் அமைப்பினர் கண்காட்சியில் பங்கேற்றனர். மூன்று நாட்களில், 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
இதுகுறித்து ஐ.கே.எப்., அசோசியேஷன் சேர்மன் சக்திவேல் கூறியதாவது:
இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இலங்கை, நார்வே, கொலம்பியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகளிலிருந்து பையர்கள், கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை செய்துள்ளனர். அமெரிக்க சந்தைக்கு மாற்று சந்தைகளை கண்டறிந்து, வர்த்தக தொடர்பை உருவாக்க, 'நிட்பேர்' கண்காட்சி சரியான வாய்ப்பாக அமைந்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனுடன், வரியில்லா வர்த்தக உடன்படிக்கை, விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்தியா சர்வதேச 'நிட்பேர்' கண்காட்சி, பிரிட்டன் வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்க, பக்கபலமாக இருக்கும் என்றும், தொழில்துறையினர் நம்பிக்கை அடைந்துள்ளனர். குறிப்பாக, புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து, நீண்டகால தொழில், வர்த்தக கூட்டமைப்பை உருவாக்க உறுதுணையாகவும் இருக்கும்.
கண்காட்சியில், உடனடியாக வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான விசாரணை நடந்துள்ளது. மேலும், நீண்ட கால வர்த்தக தொடர்பை உருவாக்கும் வகையில், 750 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.