ADDED : ஜூன் 22, 2025 12:50 AM

ததும்பும் நீரில், மிதந்து செல்லும் படகில் சவாரி செய்வதென்பது மனதிற்கு இதம். அதுவே, ஒரு போட்டியாக நடத்தப்பட்டால் 'த்ரில்' அனுபவமாக மாறும்.
இத்துடன், நீர் விளையாட்டில் வீரர்களை உருவாக்கி, அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாக்கித் தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, 'காவிலிபாளையும் படகு சங்கம்'.
திருப்பூர் மாவட்ட எல்லையில், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குள் செயல்படும் இச்சங்கம், 480 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து, நீர் நிரம்பி ததும்பி ரம்மியமாக காட்சியளிக்கும் காவிலிபாளையம் குளத்தில் நீர் விளையாட்டை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
படகு சவாரிபயிற்சி தீவிரம்
சங்கத்தினரின் தொடர் முயற்சி மற்றும் கோரிக்கையை தொடர்ந்து, நீர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' அமைப்பு, கள ஆய்வு செய்து, படகு போட்டி நடத்துவதற்கான சூழல் இங்குள்ளது என,'பச் சைக்கொடி' காட்டியது. இதையடுத்து, உள்ளூர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மட்டுமின்றி, அருகேயுள்ள மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களும் படகு சவாரி செய்வதற்குரிய பயிற்சியை பெற, படகுகள் வாங்கப்பட்டுள்ளன; பயிற்சியில் ஈடுபட துவங்கியுள்ளனர், இளைஞர்கள் சிலர்.
காவிலிபாளையம் படகு சங்க செயலாளர் பிரபு, செயலர் தினேஷ்குமார், பொருளாளர் செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலையரசன், ரமேஷ், பரணி குமார், கீர்த்திவாசன், ஆனந்த் உள்ளிட்ட பலரும் இணைந்து, இதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர்.
அரசு துறைகள்
அனுமதி பெற மும்முரம்
நீர் விளையாட்டில் தேசிய, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெறுவோருக்கு, மத்திய அரசு வேலை காத்திருக்கிறது. மேற்கு தமிழகத்தில் நீர் விளையாட்டுக்குரிய கட்டமைப்பை முதன் முறையாக, காவிலிபாளையம் குளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். பயிற்சி பெறுவதற்கு, படகுகளும் வாங்கப்பட்டுள்ளன.
நீர் விளையாட்டு நடத்துவதற்கு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் அனுமதி தேவை என்ற நிலையில், அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறோம். உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அமைச்சரின் கவனத் துக்கும் விஷயத்தை கொண்டு சென்று, அவர்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளோம். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, நீர் விளையாட்டு போட்டிகளை நடத்துவதே எங்களின் பிரதான திட்டம். தவிர, மாநில, தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கியுள்ளோம்.
- நிர்வாகிகள், காவிலிபாளையம் படகு சங்கம்.