Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பச்சை மிளகாய் விலையில் காரம் :வரத்து குறைவால் மாற்றம்

பச்சை மிளகாய் விலையில் காரம் :வரத்து குறைவால் மாற்றம்

பச்சை மிளகாய் விலையில் காரம் :வரத்து குறைவால் மாற்றம்

பச்சை மிளகாய் விலையில் காரம் :வரத்து குறைவால் மாற்றம்

ADDED : ஜன 28, 2024 10:55 PM


Google News
உடுமலை;வரத்து குறைவால், பச்சை மிளகாயின் விலை சந்தைகளில், தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு பச்சை மிளகாய் ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது.

சொட்டு நீர் பாசன முறை பின்பற்றப்படுவதால், தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளிலும் இவ்வகை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தனியார் நாற்றுப்பண்ணைகளில் இருந்து, நாற்றுகளை வாங்கி நடவு செய்து செடிகளை பராமரிக்கின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் பச்சை மிளகாய், பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிறகு, பனிப்பொழிவு அதிகரிப்பு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால், பச்சை மிளகாய் செடிகளில், உற்பத்தி பாதித்துள்ளது.

பூ உதிர்தல், இலை கருகல் உள்ளிட்ட பாதிப்புகளும் காணப்படுகிறது. எனவே, உற்பத்தியும், உடுமலை தினசரி சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.

தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், மிளகாயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று, தரத்தின் அடிப்படையில், பச்சை மிளகாய்க்கு கிலோ, 65 ரூபாய் வரை விலை கிடைத்தது.

'நடப்பு சீசனில், உடுமலை சுற்றுப்பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், புதிதாக நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, வரத்து சீராவதில், தாமதம் ஏற்பட்டு, விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விலை வீழ்ச்சியின் போது, மிளகாயை மதிப்பு கூட்டி வற்றல் மிளகாயாக விற்பனை செய்கிறோம்,' என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us