Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள் 

மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள் 

மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள் 

மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள் 

ADDED : ஜூன் 27, 2025 11:35 PM


Google News
திருப்பூர்; சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனராகப் பணியாற்றிய அமித், திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்ற அவருக்கு மேயர் தினேஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.''மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு புதிய மாநகராட்சி கமிஷனர் தீர்வு காண வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 4 மண்டலங்கள், 60 வார்டுகள் என்ற அடிப்படையில், 14 லட்சம் மக்கள் தொகையுடன் அமைந்துள்ளது. பின்னலாடைத்துறையில் கோலோச்சி வரும் 'டாலர் சிட்டி', அடிப்படை வசதிகளில் பின்தங்கியே உள்ளது. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

குப்பைகள் தலைவலி


மாநகரில் தினமும் சராசரியாக 800 டன் என்ற அளவில் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இதில், 50 டன் என்ற குறைந்த அளவில் காய்கறி கழிவுகள் மட்டும் நுண்ணுயிர் உர உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற கழிவுகள், பாறைக்குழிகளில் கொட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மாநகராட்சிக்கு சவாலாகியுள்ளது. குப்பை கழிவுகளை மறு சுழற்சி, மறு பயன்பாடு, மாற்று எரிசக்தி போன்ற வழிகளில் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ரோடுகள் மோசம்


பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டி முறையாக மூடாமல் ரோடுகள் மோசமாக உள்ளது. நகரில் போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் விரயம், கால விரயம் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, வார்டுகளுக்குள் பல பகுதிகளில், ரோடுகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.

ஆக்கிரமிப்புகள்


மோசமான ரோடு மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் தான். ஆக்கிரமிப்புகளைப் பொறுத்த வரை அரசியல் தலையீடு, மாமூல் வசூல் அதிகளவில் உள்ளது.

வடிகால் வசதியில்லை


நகரப் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் உரிய மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் அப்பகுதியினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஒளிராத விளக்கு


தெரு விளக்குகளைப் பொறுத்தவரை பிரதான ரோடுகள் மற்றும் வீதிகளில் உரிய எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. பல்லாயிரம் தெரு விளக்குகளுக்கு நிதி ஒதுக்கி, அவை தருவிக்கப்பட்ட நிலையிலும், மின் இணைப்புகள் பெறுவதில் நிலவும் தாமதம் இந்த விளக்குகளை எரிய விடாமல் செய்கிறது.

புதிய விளக்குகள் பொருத்தினாலும், பொருட்கள் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டுகளை கவுன்சிலர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் வைக்கின்றனர். முக்கியமாக பல வீதிகளில் விளக்குகள் பழுதடைவதும் தொடர்கதையாக உள்ளது. அவற்றை சரி செய்ய தரமான உதிரி பாகங்களை பொருத்த வேண்டிய அவசியம். ஏதோ, 'கடமைக்கு' செய்வது தான், தெரு விளக்கு பிரச்னை இன்னும் தீராமல் உள்ளது.

வதைக்கும் வரி உயர்வு


மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் கட்டட அனுமதி கட்டடணம் மிக அதிகம் என்ற குற்றச்சாட்டும், அதற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்துள்ளது. இதில் உரிய கவனம் செலுத்துவதோடு, பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிைவேற்றும் வகையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். இதில் மிக முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில் நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், புதிதாக கட்டிய கட்டடங்கள் அங்கீகாரமின்றியும், வரி விதிப்பு செய்யப்படாமலும் உள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வருவாய் இழப்பு


குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட டவுன்ஹால் பல்நோக்கு அரங்கம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோல, பல கட்டடங்களாலும், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டிலும் இதே நிலை தான். வருவாய்க்காக கட்டப்பட்ட கடைகள் பெரும்பாலானவை காலியாகவே கிடக்கிறது.

இவ்வாறு, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு மட்டங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. உரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இது போல் மாநகராட்சி பகுதியில் எண்ணற்ற பிரச்னைகள் தீர்வுக்காக காத்து கொண்டுள்ளது. புதிய கமிஷனர் இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us