Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் ஊழியர்கள் நியமனம் ஆதார் மையத்துக்கு அவசியம்

கூடுதல் ஊழியர்கள் நியமனம் ஆதார் மையத்துக்கு அவசியம்

கூடுதல் ஊழியர்கள் நியமனம் ஆதார் மையத்துக்கு அவசியம்

கூடுதல் ஊழியர்கள் நியமனம் ஆதார் மையத்துக்கு அவசியம்

ADDED : ஜூன் 07, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
பல்லடம்: ஆதார் மையத்துக்கு கூடுதல் பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடத்தில், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனிநபர் அடையாள அட்டையாகவும், முகவரி சான்றாகவும் பயன்படும் ஆதார் அட்டை, ஆவணங்களை பெறுவதற்கும், அரசு திட்டங்கள், சலுகைகளை பெறவும் அவசியமாகிறது. புதிய ஆதார் அட்டை பெறவும், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் ஆதார் சேவை மையங்களை நாடுகின்றனர். பல்லடம் தாலூகா அலுவலகம், நகராட்சி மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன.

இவற்றில், எப்போது பார்த்தாலும் பொதுமக்கள் காத்திருப்பதே வாடிக்கையாக உள்ளது. ஆதார் மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நபர் ஒருவர் ஆதார் சேவையைப் பெற குறைந்தபட்சம், 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கிடையே, சர்வர் கோளாறு, கைரேகை பதிவாவதில் இடையூறு ஆகியவற்றால், அவ்வப்போது கூடுதல் நேரமும் ஏற்படுகிறது.

இதனால், டோக்கன் பெற்றாலும், பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆதார் பதிவுக்காக, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர்.

காலையில் வரும் பொதுமக்கள், எப்போது வீட்டுக்கு திரும்புவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வயதானவர்கள் மற்றும் தாய்மார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆதார் மையங்களில், ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதும் தாமதத்துக்கு காரணமாகிறது. எனவே, கூடுதல் பணியாளரை நியமித்து, சேவைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us