Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜமாபந்தியில் ஆதி காலத்து அளவீடு கருவி ஆய்வு ;பழமை மாறாத வருவாய்த்துறை

ஜமாபந்தியில் ஆதி காலத்து அளவீடு கருவி ஆய்வு ;பழமை மாறாத வருவாய்த்துறை

ஜமாபந்தியில் ஆதி காலத்து அளவீடு கருவி ஆய்வு ;பழமை மாறாத வருவாய்த்துறை

ஜமாபந்தியில் ஆதி காலத்து அளவீடு கருவி ஆய்வு ;பழமை மாறாத வருவாய்த்துறை

ADDED : மே 21, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
உடுமலை: நில அளவைக்கு நவீன தொழில் நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஜமாபந்தியில், இன்று வரை ஆங்கிலேயர் காலத்து அளவு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நிலங்கள் அளவீடு செய்ய, ஆங்கிலேயர் காலத்திலிருந்து, லிங்ஸ், 'கிராஸ்டாப்' எனப்படும் கோணக்கட்டை, லிங்ஸ் ஊசி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம அலுவலர் வசமும், இந்த நில அளவை கருவி கட்டாயமாக இருக்க வேண்டும்.

அளவீடு செய்யும் போது, நிலத்தின் திசை மற்றும் வடிவத்தை அளவீடு செய்ய கோணக்கட்டையிலுள்ள சிறிய துளை வாயிலாக, நேர் கண்டறியப்படுகிறது. அதற்கு பின், நுாறு 'லிங்ஸ்' அதாவது, 20 மீட்டர் கொண்ட செயின் வாயிலாக அளவீடு செய்யப்படுகிறது.

செயின் நகராமல் இருக்க, ஊசி பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்தில் இம்முறையில் அளவீடு செய்யப்பட்டு வந்த நிலையில், அதற்கு பின் 'டேப்' வாயிலாக அளவீடு செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, 'டிஜிட்டல் மீட்டர்' கொண்டு, டிஜிட்டல் சர்வே செய்யப்பட்டு வருகிறது. மேலும், நவீன முறையாக தற்போது, 'டிஜிட்டல் குளோபல் பொசிசன் சிஸ்டம்' என்ற முறையில், அதி துல்லியமாக சர்வேத்துறை சார்பில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இம்முறை, அரசால் அங்கீகரிக்கப்பட்டு, நில அளவை பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இருப்பினும், ஆண்டு தோறும் கிராம கணக்குகள் தணிக்கை மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடி தீர்வு காணும் வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பாரம்பரிய அளவீடு முறையான, கோணக்கட்டை, லிங்ஸ், ஊசி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு, 24 வகையான கிராம ஆவணங்களுடன், நில அளவை கருவியும் ஆய்வு செய்யப்படுகிறது.

நில அளவைக்கு கடந்த, 50 ஆண்டுக்கும் மேலாக இம்முறை பயன்படுத்தப்படாத நிலையிலும், இன்றளவும், ஜமாபந்தியன்று, இவை எடுத்து, கழுவி, சுத்தம் செய்து வைக்கப்படுகிறது.

ஒரு சில கிராமங்களில் இல்லாத நிலையில், ஒன்றையே பல கிராமங்களின் பெயர் எழுதி காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

கட்டாயம் இடம் பெற வேண்டும்

அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது நில அளவைக்கு நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. லிங்ஸ் அளவீடு செய்வதில்லை; பழைய நடைமுறையை பின்பற்றும் வகையில், கிராம தணிக்கையின் போது காட்சிப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு இதனை பயன்படுத்த தெரியாது. இருப்பினும், கிராமத்தணிக்கையின் போது கட்டாயம் இடம் பெற வேண்டும்,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us