/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அநீதிகளுக்கு எதிராக சுழலட்டும் 'சாட்டை'; புதிய கலெக்டர் மீது மக்கள் எதிர்பார்ப்பு அநீதிகளுக்கு எதிராக சுழலட்டும் 'சாட்டை'; புதிய கலெக்டர் மீது மக்கள் எதிர்பார்ப்பு
அநீதிகளுக்கு எதிராக சுழலட்டும் 'சாட்டை'; புதிய கலெக்டர் மீது மக்கள் எதிர்பார்ப்பு
அநீதிகளுக்கு எதிராக சுழலட்டும் 'சாட்டை'; புதிய கலெக்டர் மீது மக்கள் எதிர்பார்ப்பு
அநீதிகளுக்கு எதிராக சுழலட்டும் 'சாட்டை'; புதிய கலெக்டர் மீது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 11:56 PM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டராக மனீஷ் நாரணவரே நேற்று பொறுப்பேற்றார். ''நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதோடு, அநீதிகளுக்கு எதிராக கலெக்டர் 'சாட்டை'யைச் சுழற்ற வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், சுற்றுலா துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், ஈரோடு மாநகராட்சி முன்னாள் கமிஷனரான மனீஷ் நாரணவரே, புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனீஷ் நாரணவரே, 2014ல், எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார். கடந்த 2016ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார். 2017ல், திருச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி); 2018ல், நெல்லையில் சப் கலெக்டர்; 2020ல், சென்னையில் வணிகவரித்துறை அமலாக்க பிரிவு இணை கமிஷனர்; 2021ல், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனராக பணிபுரிந்துள்ளார். 2022ல், சென்னையில் கூடுதல் இயக்குனராக (ஊரக வளர்ச்சி) பணிபுரிந்த இவர், 2023ல், ஈரோட்டில் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்தார். 2024ல், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்த இவர், தற்போது, திருப்பூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனீஷ் நாரணவரே நேற்று காலை திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
உள்கட்டமைப்பில் கூடுதல் கவனம்
தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மாவட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் புதிய கலெக்டர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பின்னலாடை தொழில் வளர்ச்சியால், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் திருப்பூர் நோக்கி வருகின்றனர். மாவட்ட காவல்துறைக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி, அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் நிலை நாட்டவேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பயன்பாட்டை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும்.
மாசுகட்டுப்பாடு வாரியத்தை, சிறப்பாக செயல்படச்செய்து, நீர் நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
நேரடியாக சந்திக்கும் சூழல் வேண்டும்
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒழுங்கீன அதிகாரிகள், அலுவலர்களை களையெடுத்து, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவேண்டும். ஏழைகளும், மிக சுலபமாக கலெக்டரை நேரடியாக சந்தித்து, குறைகளை தெரிவிக்கும்வகையிலான நிர்வாக சூழல் உருவாகவேண்டும்.