/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள் திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
ADDED : ஜூன் 07, 2025 09:25 AM

திருப்பூர்; திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் சொந்த ஊரை விட்டு, இடம் பெயர்ந்துவந்து வசிக்கின்றனர். வேலையில் பரபரப்பாக இயங்கும் பெற்றோர் பலர், தங்கள் பதின்ம வயது குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க தவறிவிடுகின்றனர்.
இதனால், சிறுமியர் பலர், அறியாத வயதிலேயே காதல் வயப்பட்டு, வாழ்க்கையை தொலைக்கின்றனர். சில பெற்றோர், பள்ளி படிப்பு முடித்த உடனேயே அவசர கதியில் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
குடும்ப பொருளாதார சூழல்களை காரணம் காட்டியும் பெற்றோர், தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர்.
பெரும்பாலான குழந்தை திருமணங்கள், பெற்றோர், உறவினர்களின் சம்மதத்தோடு நடைபெறுவதால், அவற்றை தடுப்பது சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறையினரால் இயலாததாகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு, ஜன., மாதம் முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், 47 குழந்தை திருமண புகார்கள் சமூக நலத்துறையில் பதிவாகியுள்ளன. இவற்றில், வெறும் 15 சதவீதம், அதாவது, வெறும், 7 திருமணங்களை மட்டுமே அதிகாரிகளால் தடுக்க முடிந்துள்ளது. 40 திருமணங்கள் நடைபெற்றுவிட்டன.
கடந்த ஆண்டு, ஏப்., முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், 120 குழந்தை திருமண புகார்கள் பதிவாகியிருந்தன. எண்ணிக்கை அளவில் பார்க்கும்போது, குழந்தை திருமண புகார்கள் குறைந்துள்ளன. ஆனால், தடுத்து நிறுத்தப்படும் குழந்தை திருமணங்களின் விகிதம் குறைந்து வருவது; திட்டமிட்டபடி குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுவிடுவது கவலை அளிப்பதாக உள்ளது.