/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் வாடினோம் வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் வாடினோம்
வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் வாடினோம்
வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் வாடினோம்
வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் வாடினோம்
ADDED : ஜூன் 29, 2024 01:37 AM

திருப்பூர்;''கோவை - திருப்பூர் மாவட்டங்களில் ஒரு கோடி தென்னைகளில் வேர்வாடல் நோய் பரவியிருக்கும்; வாடிய தென்னையைக் கண்டபோதெல்லாம் நாங்கள் வாடிப்போகிறோம்'' என்கின்றனர் விவசாயிகள். வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி, தென்னையைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கணக்கெடுப்பு விரைவுபடுத்துங்கள்
விவசாய அமைப்பு பிரதிநிதிகள் பேசியதாவது:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், தென்னை வேர்வாடல் நோய் பரவியுள்ளது. நான்கு கட்டமாக பரவும் இந்நோய், தாக்கம் அதிகமான பிறகுதான். தென்னை ஓலை மஞ்சள் நிறமாக மாறுகிறது. அதற்கு பிறகு தென்னையை போராட சிரமப்பட வேண்டியுள்ளது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகளும், தென்னை சாகுபடியில் அதிக அளவு ஈடுபட்டுள்ளனர். தமிழக அளவில், கோவை - திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 4.50 கோடி தென்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றில், ஒரு கோடி தென்னை மரங்களுக்கு வேர்வாடல் நோய் பரவியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து, தென்னை கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். கணக்கெடுப்பை விரைவுபடுத்த வேண்டும். வேர்வாடல் நோய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதிப்புகளை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலை அலுவலர்களின் பங்களிப்புடன், கள ஆய்வு நடத்த வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால், பாதிப்பை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். எனவே, கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். முன்னதாக, வேர் வாடல் நோய் மற்றும் அதிலிருந்து தென்னையை பாதுகாப்பது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அருகே உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்துறை அலுவலகங்களில், அதற்கான மருந்துகள் கிடைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
---
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், பங்கேற்றோர்.