/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விடுதிகளில் தங்கி பயில விருப்பமா? 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் விடுதிகளில் தங்கி பயில விருப்பமா? 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
விடுதிகளில் தங்கி பயில விருப்பமா? 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
விடுதிகளில் தங்கி பயில விருப்பமா? 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
விடுதிகளில் தங்கி பயில விருப்பமா? 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 12, 2024 01:49 AM
திருப்பூர்;அரசு பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் தங்கி பயில விரும்பும் மாணவ, மாணவியர், விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியருக்காக, 21 விடுதிகள் செயல்படுகின்றன. மாணவருக்கான, 10 பள்ளி விடுதி மற்றும் மூன்று கல்லுாரி விடுதி; மாணவியருக்கு, ஏழு பள்ளி விடுதி, ஒரு கல்லுாரி விடுதிகள் உள்ளன.
பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியர் சேரலாம். மூன்று வேளை உணவு மற்றும் தங்கும்வசதி இலவசமாக அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, நான்கு இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்படும்.
கல்லுாரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் ஜமுக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கி பயில்வோருக்கு, பாய்களும் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில், கம்பளி ஆடைகள் வழங்கப்படும்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து, கல்வி நிலையத்தின் தொலைவு, குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்; இவ்விதி மாணவியருக்கு பொருந்தாது.
விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விடுதி காப்பாளர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி விடுதிகளில் சேர, வரும் 14ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளில் சேர, ஜூலை 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் வழங்க தேவையில்லை; விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும்,முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும், தனியே ஐந்து இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அரசு விடுதி சலுகையை பயன்படுத்தி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.