ADDED : ஜூலை 27, 2024 12:00 AM
'போக்சோவில்' வாலிபர் கைது
திருப்பூர், பாண்டியன் நகரை சேர்ந்தவர், கார்த்திகேயன், 25; பனியன் நிறுவன டெய்லர். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அலகு பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குழந்தை திருமணம் செய்தது மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கார்த்திகேயன் மீது, வடக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ், போலீசார் அவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.
பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
முத்துார், மேட்டுக்கடையைச் சேர்ந்தவர் பழனிசாமி, 85. விவசாயி. கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமில்லாமல் இருந்தார். மனமுடைந்த அவர் தோட்டத்தில் பயிர்களுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கள் இறக்கிய இருவர் கைது
காங்கயம், ஊதியூர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஊதியூரில் ராஜ்குமார், 36, என்பவர் தோட்டத்திலும், குருக்கபாளையம் நல்லமுத்து, 63 தோட்டத்திலும் கள் இறக்கியது தெரிந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, இருவரிடமிருந்தும் தலா ஆறு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். தென்னை மரங்களில் கட்டியிருந்த பானைகளையும் போலீசார் உடைத்தனர்.
பூட்டிய வீட்டில் தீ: பொருள் சேதம்
காங்கயத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 38. தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு, பிரகாஷ் தன் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றார். இந்நிலையில் பகல் 12:00 மணியளவில் வீட்டிலிருந்து புகை வந்து. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் காங்கயம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், பொருட்கள் அனைத்தும் மற்றும் மேற்கூரையும் சேதமானது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.