Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பசுமை கிராமங்களை உருவாக்கும் மக்கள்; 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமை கிராமங்களை உருவாக்கும் மக்கள்; 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமை கிராமங்களை உருவாக்கும் மக்கள்; 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமை கிராமங்களை உருவாக்கும் மக்கள்; 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

ADDED : ஆக 06, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
உடுமலை : வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், ஊராட்சியில், 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், கோவில் நிலங்கள் என நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சியில், 2019ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும், மண்ணின் மரபு சார்ந்த மரங்களும், பறவைகளுக்கு உணவளிக்கும் வகையில், பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

முதலில் நடவு செய்த பகுதிகளில், பசுமையான சோலையாக மாறி, துாய காற்று, பருவம் தவறாத மழை மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களும் வாசம் செய்யும் குறு வனமாக மாறியுள்ளது.

வடுகபாளையம், லிங்கமநாயக்கனுார், சுங்காரமடக்கு ஆகிய கிராமங்களில், மயான பூமிகள், மந்தை வெளி புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் சுத்தப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

அதே போல், மூன்று கிராமங்களிலும், குட்டை கரைகள், ஓடை தடுப்பணை பகுதி, ரோடுகளின் இரு புறமும் பசுமை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு, 10வது திட்டத்தின் கீழும், புங்கன், ஆயன், சொர்க்கம், பூவரசன், தான்றி, இலுப்பை, புளி, வேம்பு என பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, மொத்தம், 28 ஆயிரம் மரக்கன்றுகளுடன் பசுமையான ஊராட்சியாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

ஊராட்சித்தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ''வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில், 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மூன்று கிராமங்களிலும், முட்காடாக காணப்பட்ட பகுதிகள் தற்போது, பசுமையான வனமாக மாறியுள்ளது''.

''மரக்கன்றுகள் நடவு செய்யப்படுவதோடு, ஊராட்சி பணியாளர்கள், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் வாயிலாக நீர் ஊற்றி, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் நடவு செய்யப்பட்ட கன்றுகள், தற்போது மரமாக வளர்ந்துள்ளது,'' என்றார்.

அதே போல், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், நரசிங்காபுரம் ஐயப்பா புளூ மெட்டல்ஸ் வளாகத்தில், 100 வேம்பு மரக்கன்றுகளும், பெதப்பம்பட்டி, பொட்டிநாயக்கனுார் விவசாயி பிரபாகரனுக்கு சொந்தமான நிலத்தில், 350 மகாகனி மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், கோவில்கள், பள்ளிகள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் நடவு செய்து, மரங்களாக வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us