ADDED : ஜூன் 03, 2024 01:00 AM

பல்லடம்;பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள், வார்டு குறித்த விவரங்கள் இன்றி, வெற்று பலகை களாக காட்சியளித்து வருகின்றன.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2022 நகர உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. இதன்படி, 1 முதல் 18 வார்டுகளில் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
சீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் வார்டுகளில் உள்ள வழிகாட்டி பலகைகள் மாற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை வழிகாட்டிப் பலகைகள் மாற்றப்படவில்லை.
டிஜிட்டல் முறையில் வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்படும் என, கடந்த ஆண்டே நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அதற்கான முகாந்திரமே இல்லை. பெரும்பாலான வார்டுகளில், பழைய வார்டு எண்ணுடன் வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. பல வார்டுகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள், தெருவின் பெயர், வார்டு எண் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லாமல் வெற்று பலகையாக காட்சியளித்து வருகின்றன. வார்டு சீரமைக்கப்பட்டதன் அடிப்படையில், 18 வார்டுகளிலும் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.