ADDED : ஜூன் 12, 2024 01:52 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, கந்தம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கந்தம்பாளையம் பிரிவு முதல் குள்ளேகவுண்டம் பாளையம் மற்றும் சுண்டக்காம்பாளையம் வரை செல்லும் 3 கி.மீ., ரோடு முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இது குறித்து, கந்தம்பாளையம், குள்ளேகவுண்டம்பாளையம் கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: கந்தம்பாளையம் ரோடு மிகவும் மோசமாக உள்ளதால், அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பணிகள் முடித்து இரவு நேரங்களில் டூவீலர் மற்றும் நடந்து வருபவர்கள் ரோட்டில் உள்ள பெரிய குழிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையும் உள்ளது.
மக்களை சிரமப்படுத்தும் இந்த ரோட்டை சீரமைக்கவில்லை என்றால், பொதுமக்களை ஒன்று திரட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.