Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நட்பில் ஒளிந்த துரோகம்; உயிரைப் பறித்த கொடூரம் வாலிபர் கொலை; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நட்பில் ஒளிந்த துரோகம்; உயிரைப் பறித்த கொடூரம் வாலிபர் கொலை; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நட்பில் ஒளிந்த துரோகம்; உயிரைப் பறித்த கொடூரம் வாலிபர் கொலை; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நட்பில் ஒளிந்த துரோகம்; உயிரைப் பறித்த கொடூரம் வாலிபர் கொலை; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ADDED : ஜூலை 07, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூரில், சிறுமி, இளம்பெண்களுடனான வீடியோக்களை எடுத்த வாலிபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 11 பேர் கைதானது தொடர்பான பல்வேறு திடுக்கிடும் பின்னணித்தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பர்களாக பழகிவந்தவர்களிடம் மறைந்திருந்த துரோகமே, கொலைக்குப் பிரதானக் காரணமாக அமைந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் அன்பு, 23. திருப்பூர், கணக்கம்பாளையத்தில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் பகுதியில் கும்பல் ஒன்றால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அன்புவுடன் பழகி வந்த நண்பர்கள் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. கொலை தொடர்பாக சூர்யமூர்த்தி, 28, நிருபர்கள் பிரசன்னா, 28, அருண்பாண்டி, 37, இலங்கை அகதி இந்துஜான், 24, தமிழரசன், 23, ரஞ்சித்குமார், 25, அங்கையர் லட்சுமணன், 36, ஜெயலட்சுமணன், 29, ருத்ரமூர்த்தி, 24, உதயதர்ஷன், 24, அஜீத், 22 என, 11 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லதுரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

வசீகரப் பேச்சில்

வீழ்த்திய அன்பு

போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட அன்பு, அவரது சகோதரர் என, இருவர் மட்டும் கணக்கம்பாளையத்தில் தங்கியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவியர், இளம்பெண், திருமணமான பெண்கள் என, பலரிடமும் எளிதாக பேசி, அன்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வார்; பேச்சு வலையில் வீழ்வோரின் அந்தரங்க வீடியோ, போட்டோக்களை எடுத்து வைத்து கொள்வார்.

இது சூர்யமூர்த்தி, பிரசன்னா, அருண்பாண்டி உள்ளிட்ட நண்பர்கள் சிலருக்கு தெரிய வந்தது. இதில் பிரசன்னா, அருண்பாண்டி ஆகியோர் நிருபர்கள். 'இப்பிரச்னையை போலீசிடம் தெரிவித்து உன்னைக் கைது செய்ய வைப்போம்' என அன்புவை மிரட்டி, பணம் பறிக்க திட்டமிட்டனர்.

இதற்கிடையே மதுக்கடையில் மது அருந்திய போது, வீடியோ, போட்டோ குறித்து தெரிவித்து, பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு அன்புவை மிரட்டினர். அதில், சூர்யமூர்த்தி, அன்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கொலைக்கான காரணம்

சில நாட்கள் கழித்து, சூர்யமூர்த்தியை தனிமையில் சந்திக்குமாறு பெண் ஒருவர் அழைக்கிறார். இதை அன்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சூர்யமூர்த்தி நினைத்து கொண்டார். பாதுகாப்புக்காக அங்கேரிபாளையத்தில் உள்ள நண்பர் அங்கையர் லட்சுமணன் வீட்டில் தங்கி கொள்கிறார். அன்புவுக்கு எதிராக உள்ள நண்பர்களை எல்லாம் ஒன்று சேர்த்து பழிவாங்கும் பணியில் சூர்யமூர்த்தி இறங்கி, எதிரான நபர்களை எல்லாம் ஒன்று சேர்த்தார்

கடந்த, 2ம் தேதி செல்லதுரை என்பவர் மூலம் அன்புவை ஏ.வி.பி., லே அவுட் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு தயாராக இருந்த சூர்யமூர்த்தி உள்ளிட்டோர் அன்புவை வீதியில் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

இப்படியும் நண்பர்கள்

இதற்கு முன்னதாக அன்புவின் நண்பர் தமிழரசன், அன்புவின் மொபைல் போனில் இருந்து, தான் காதலித்து வந்த, 14 வயது சிறுமியுடன் அன்பு இருக்கும் வீடியோவை, நண்பர்களுக்கு தெரியாமல் எடுத்து, சிறுமியின் தந்தைக்கு அனுப்பி மிரட்டி, 15 ஆயிரம் ரூபாய் வாங்கினார். இதையறிந்த மற்ற நண்பர்கள் கோபமடைந்து, '10 லட்சம் ரூபாய் வரை அன்புவிடம் பறிக்கும் திட்டத்தை நீ கெடுத்துவிடுவாய்' எனக்கூறி தமிழரசனை தாக்கி எச்சரித்தனர்.

போலி நிருபர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்

அன்பு கொல்லப்பட்ட வழக்கில் கைதான இரண்டு நிருபர்கள், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகம் என, பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்றவை செய்து, மற்றவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். சில மாதங்கள் முன், இதில், ஒருவர் 'ஸ்பா'வுக்கு சென்று, அங்கு பணம் கேட்டு மிரட்டினார். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கவே, எழுந்த பிரச்னையில், பணியில் இருந்த பெண்ணை தாக்கியது குறித்து போலீசாருக்கு புகார் சென்றது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், சி.எஸ்.ஆர்., உடன் போலீசார் நிறுத்திக்கொண்டனர். பின், புகார் கொடுத்த பெண்ணும், மனுவை திரும்ப பெற்று சென்றுள்ளார். மாவட்டத்தில், பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பணம் பறிக்கும் கும்பல் மீது போலீசார், மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டதற்கு, '' பத்திரிகையாளர்கள் மிரட்டல் தொடர்பாக சில அமைப்பின்ர் புகார் கொடுத்து இருக்கின்றனர். இதை விசாரித்து, போலி நிருபர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, போலீஸ் கமிஷனர், எஸ்.பி., ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us