ADDED : ஜூன் 25, 2024 12:51 AM
அவிநாசி:'அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற உத்தேசிக்கப்பட் டுள்ளது' என, அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.
பதினெட்டு வார்டுகளை உள்ளடக்கிய அவிநாசி பேரூராட்சியில் கடந்த, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை, 28 ஆயிரத்து 262 பேர்; இது, தற்போது, 33 ஆயிரத்து 600 என, அதிகரித்திருக்கலாம் என்பது பேரூராட்சியின் உத்தேச கணக்கு. '30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தும் வாய்ப்பு இருந்ததால், அவிநாசியும் நகராட்சியாக தரம் உயரும்' என, எதிர்பார்க்கப்பட்டது.
கடந்தாண்டு, அவிநாசி பேரூராட்சி எல்லை யில் உள்ள வேலாயுதம்பாளையம், செம்பியநல்லுார் உள்ளிட்ட ஊராட்சிகளின் மக்கள் தொகை, அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு குறித்த விவரங்களும், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்துறை சார்பில் சேகரிக்கப்பட்டது.
சட்டமன்ற கூட்டத் தொடரில், அமைச்சர் நேரு, அவிநாசி உள்பட ஏழு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது' என, அவர் தெரிவித்துள்ளார்.
எல்லை விரிவாக்கம் மற்றும் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. 'தற்போது, 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்துவதன் வாயிலாக, பேரூராட்சிகளின் எண்ணிக்கை, 700 ஆக உயர வாய்ப்புள்ளது' எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவிநாசி உட்பட, மாநிலத்தில் உள்ள, 25 பேரூராட்சிகளில், சந்தை அமைக்கப்படும் எனவும், அமைச்சர் அறிவித்துள்ளார்.
அவிநாசி, கைக்காட்டி புதுார் பகுதியில் ஏற்கனவே, வார சந்தை செயல்படும் நிலையில், 413 கடைகளை உள்ளடக்கிய சந்தை அமைக்கும் திட்டம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பழங்கரை நிலை என்ன?
அவிநாசி அருகேயுள்ள பழங்கரை ஊராட்சியின் மக்கள் தொகை, கடந்த, 2011 கணக்கெடுப்புப்படி, 9,861; இது, தற்போது, 20 ஆயிரத்தை கடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வரியினங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. 'பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்க வேண் டும். அல்லது, அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தும்போது அதனுடன் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை பழங்கரை ஊராட்சி நிர்வாகத்தினர் உட்பட அனைத்து அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி, தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.