/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்திற்கு நிலம்: உயர்நீதிமன்றம் கேள்வி ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்திற்கு நிலம்: உயர்நீதிமன்றம் கேள்வி
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்திற்கு நிலம்: உயர்நீதிமன்றம் கேள்வி
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்திற்கு நிலம்: உயர்நீதிமன்றம் கேள்வி
ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகத்திற்கு நிலம்: உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூன் 11, 2024 11:03 PM

மதுரை : துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுார் அகழாய்வு பொருட்களை பாதுகாக்க நிரந்தர அருங்காட்சியகத்திற்கு நிலம் வழங்கும் வாய்ப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
செய்துங்கநல்லுார் காமராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லுாரில் பல கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 3800 ஆண்டுகள் பழமையான மண் பானைகள், கலைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை காட்சிப்படுத்த மத்திய அரசு 2023 ஆக.5ல் தற்காலிக அருங்காட்சியகம் துவக்கியது.
2023 டிசம்பரில் பெய்த கனமழையின்போது அருங்காட்சியகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
அருங்காட்சியகத்தை சீரமைக்க வேண்டும். வரும்காலங்களில் இயற்கை பேரிடரின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை கோரி மத்திய தொல்லியல்துறை இயக்குனர் ஜெனரல், தமிழக தொல்லியல்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க நிலம் வழங்க தனிநபர் ஒருவர் ஏற்கனவே முன்வந்தார். அதில் சிவில் பிரச்னை ஏற்பட்டது. அகழாய்வு நடந்த இடம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. அதற்கான வாய்ப்புகள் குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அருங்காட்சியகம் மேம்பாடு குறித்து மேலும் திட்டங்கள் எதுவும் உள்ளதா என மத்திய தொல்லியல்துறை திருச்சி கண்காணிப்பாளர் ஜூன் 27ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.