Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ அக்கா - தம்பிக்கு இடையே போட்டி ஒரே நாளில் இரு கூட்டங்களால் குழப்பம்

அக்கா - தம்பிக்கு இடையே போட்டி ஒரே நாளில் இரு கூட்டங்களால் குழப்பம்

அக்கா - தம்பிக்கு இடையே போட்டி ஒரே நாளில் இரு கூட்டங்களால் குழப்பம்

அக்கா - தம்பிக்கு இடையே போட்டி ஒரே நாளில் இரு கூட்டங்களால் குழப்பம்

ADDED : ஜூலை 18, 2024 08:15 PM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் பெரியசாமி. அவருடைய மறைவைத் தொடர்ந்து, அவரது மகள் கீதா ஜீவன், தி.மு.க., மாவட்டச் செயலராக உள்ளார். சமூக நலத் துறை அமைச்சராகவும் இருக்கிறார். அதேநேரம், அவருடைய தம்பி ஜெகன் பெரியசாமி, துாத்துக்குடி மேயராக உள்ளார்.

கடந்த 2022ல் மேயராக ஜெகன் பொறுப்பேற்றதில் இருந்து, அக்கா - தம்பிக்கு இடையே அதிகாரப் போட்டி துவங்கியது. இத்தகவல் கட்சித் தலைமை வரை சென்றது. உடனே, அமைச்சர் கே.என்.நேரு தலையிட்டு, பல முறை சமரசம் செய்து வைத்தார்.

இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும், வாரம்தோறும் மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்தி வரும் மேயர் ஜெகன், கடந்த புதனன்றும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டார். ஆனால், அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால், நேற்று, கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தினார்.

அக்கா - தம்பிக்கிடையே பிரச்னை இருந்தாலும், இதுவரை மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடாமல் இருந்த அமைச்சர் கீதா ஜீவன், திடீரென வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தினார்.

ஒரே ஊரில், இரு வேறு இடங்களில் அமைச்சர் மற்றும் மேயர் என, இரு தரப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தியதால், எந்தக் கூட்டத்துக்குச் செல்வது என அதிகாரிகளுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருந்தபோதும், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், சுகாதார அலுவலர் வினோத் ராஜா மற்றும் அதிகாரிகள், 15 கவுன்சிலர்கள், மேயர் நடத்திய கூட்டத்துக்குச் சென்றனர்.

இதற்கிடையில், தாசில்தார் பிரபாகரனை மட்டும் வைத்துக் கொண்டு கீதா ஜீவன், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

தலைமை தடுக்க வேண்டும்!


தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கிழக்கு மண்டல அலுவலகத்தில், மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என, நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், அமைச்சர் கீதா ஜீவன் திடீரென கூட்டத்தை நடத்தினார்.
துாத்துக்குடி தாலுகா அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம், அமைச்சர் முகாம் அலுவலகம் என, பல இடங்கள் இருக்கும்போது, வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தை தேர்வு செய்தது ஏன் என தெரியவில்லை. இந்த குழப்பத்தைத் தொடராமல், கட்சித் தலைமை தான் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us