Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 'சோலார் பேனல்' அமைக்கப்படுமா? மின் உற்பத்திக்கு பயணியர் சங்கம் ஆலோசனை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 'சோலார் பேனல்' அமைக்கப்படுமா? மின் உற்பத்திக்கு பயணியர் சங்கம் ஆலோசனை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 'சோலார் பேனல்' அமைக்கப்படுமா? மின் உற்பத்திக்கு பயணியர் சங்கம் ஆலோசனை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 'சோலார் பேனல்' அமைக்கப்படுமா? மின் உற்பத்திக்கு பயணியர் சங்கம் ஆலோசனை

ADDED : ஜூன் 12, 2025 10:58 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 'அம்ருத் பாரத்' திட்டத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள நடைமேடைகளில் 'சோலார் பேனலுடன்' கூடிய கூரை அமைத்தால், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யலாம்; இதன் மூலம், மின்செலவும் குறையும், நடைமேடையில் பயணியர் அமர நிழலும் கிடைக்கும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக, தினமும், 350 புறநகர் மின்சார ரயில், 9 விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.

இங்கிருந்து தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆண்டுக்கு, ஆறு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

ரயில்கள் நின்று செல்வதற்காக திருவள்ளூரில் ஆறு நடைமேடைகள் உள்ளன. இதில், ஐந்து நடைமேடைகள் விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில், நீளமாக அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு உள்ள கூரைகள், மின்சார ரயில்கள் நிற்கும் அளவில் தான் உள்ளன.

இதனால் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதிப்பட்டு வருகின்றனர். நடைமேடைகள் நீளமாக இருப்பதால், அதற்கு அமைக்கப்படும் மேற்கூரை செலவு அதிகமாக உள்ளது; செலவிற்கு ஏற்ற வகையில், வருவாய் இல்லை என, ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.

'சோலார் பேனல்'


இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ரயில்வே பயணியர் சங்கத்தினர், மேற்கூரை அமைக்கும் செலவினை, முதலீடாக பயன்படுத்தும் வகையில், ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அதில், மேற்கூரையை 'சோலார் பேனலாக' அமைத்தால், அதன் மூலம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால், ரயில் நிலையத்தில் பயன்படும் மின்சார செலவு குறைவதுடன், ரயில் நிலைய நடைமேடையில் பயணியர் அமர நிழல் வசதியும் கிடைக்கும் என்பது தான்.

இதன்படி, ஆறு நடைமேடைகளில், சோலார் பேனல் அமைத்தால், ரயில் நிலையத்தில் அமைந்துள்ள காவல் நிலையம், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், மேலாளர் அலுவலகம், பயணியர் முன்பதிவு மையம் மற்றும், நடைமேடையில் செலவாகும் மின்சக்தி குறையும்.

குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, செலவு குறையும் என, ரயில் பயணியர் சங்கத்தினர், அந்த ஆலோசனையில் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனையை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர், வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் சிலவற்றில், பரீட்சார்த்தமாக, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க, ரயில்வே நிர்வாகம், கடந்த சில ஆண்டுக்கு முன், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலைய அலுவலகங்களில், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க பேனல் அமைக்கப்பட்டு உள்ளது. 10 கி.வா., சூரிய மின்சாரம் தயாரிக்க 7.5 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

சூரிய மின்சாரம் கிடைப்பதால், ஆண்டுக்கு, மின்செலவில் 1.10 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் மிச்சமாகும். ஆறு ஆண்டுகளில், இந்த செலவு ஈடு செய்யப்பட்டு, அதன் பின், ரயில்வே துறைக்கு வருவாயாக கிடைக்கும். ஐந்து நடைமேடைகளிலும், சோலார் பேனல் அமைத்து, மின்சாரம் தயாரித்தால், கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பிற மின்தேவைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.

நடைமேடையில் மேற்கூரை அமைத்து, பயணியருக்கும், மழை, வெயில் காலங்களில் நிழல் கிடைக்கும்.

தற்போது, 29 கோடி ரூபாய் மதிப்பில், 'அம்ருத் பாரத்' திட்டத்தில், ரயில் நிலையம் புனரமைப்பு பணி நடக்கிறது. இத்துடன் சில கோடி செலவில், 'சோலார் பேனல்' அமைத்தால் ரயில்வே துறைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிடப்பில் பரிந்துரை கடிதம்


திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில், 'சோலார் பேனல்' அமைத்து, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது குறித்து, ரயில் பயணியர் சங்கத்தினர், ஐந்து ஆண்டுக்கு முன் ஆலோசனை கடிதம் வழங்கினர். இதை பரிசீலனை செய்ய வேண்டி, டில்லியில் உள்ள ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, அப்போது சென்னை கோட்ட ரயில்வே துறை தெரிவித்தது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல், ரயில்வே துறை கிடப்பில் போட்டுள்ளது.

- ஒய்.ஜெயபால்ராஜ்,

செயலர், நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், திருவள்ளூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us