Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?

ADDED : மார் 24, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
ஊத்துக்கோட்டை,:தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, நெல்லுார், கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.

தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் ஏற்படும் நெரிசலில் சிக்கி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதை தொடர்ந்து, தாசில்தார், டி.எஸ்.பி., ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அவசர உதவிக்கு செல்லும்போது, நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்ல நேரிடுகிறது. ஆனாலும், அதிகாரிகள் நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சமீபத்தில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்க வந்த கலெக்டர் பிரதாப், 'போக்குவரத்திற்கு இடையூறு இன்றி கடைகள் வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று காலை நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. இதைப் பார்த்த மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதை தொடர்ந்து, உயிர்பலி ஏற்பட்டால் தான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us