Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

ADDED : ஜன 08, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்கும் பணிகள், ஆறு மாதங்களாக நடைபெறுகின்றன.

கரையின் உள்பகுதியில் கான்கிரீட் சுவர் அமைப்பது, மண் அரிப்பை தவிர்க்க சரிவுகளில் பாறைகள் பதிக்கப்படுவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு பணிகளுக்காக, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர், பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போது, நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில், சோழவரம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும்.

கடந்த ஆண்டும், தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியில் நீரைதேக்கி வைத்தால், கரை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் என்பதால், அதை புதியதாக அமைக்கப்பட்ட ஷட்டர்கள் வழியாக, கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்த நிலையில், சோழவரம் ஏரியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றிற்கு நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.

அதே சமயம் தற்போது ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை, பிரதான ஷட்டர்கள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 200 கனஅடி தண்ணீர் வெளிறே்றி, பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி ஏரியில், 0.50 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது. சோழவரம் ஏரியின் கரை சீரமைப்பு பணிகள் முழுமை பெறாததால், தற்போது தேங்கியுள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு கொணடு செல்லப்படுவதாக நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us