Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சிறையில் போலீசாருடன் மோதல் நைஜீரிய பெண் கைதிகள் அடாவடி

சிறையில் போலீசாருடன் மோதல் நைஜீரிய பெண் கைதிகள் அடாவடி

சிறையில் போலீசாருடன் மோதல் நைஜீரிய பெண் கைதிகள் அடாவடி

சிறையில் போலீசாருடன் மோதல் நைஜீரிய பெண் கைதிகள் அடாவடி

ADDED : ஜன 03, 2024 10:13 PM


Google News
புழல்:சென்னை புழல் மத்திய மகளிர் சிறையில், 200 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான நைஜீரிய நாட்டு பெண் கைதிகள் சேவோயோக்கா, 29, பெரிபிக்யூஸ்நேக்மாகோனு, 45, ஆகியோரும் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பெண் கைதிகள் இருவரும் நேற்று முன்தினம் தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க மொபைல்போன்கள் வேண்டும் என, உதவி ஜெயிலர் சுதாராணியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்துள்ளார். அதனால், அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, பணியில் இருந்த சிறை பெண் போலீசார், பானுபிரியா, விஜயநந்தினி, சாவித்திரி, வெண்ணிலா ஆகியோர், நைஜீரிய பெண் கைதிகளை தடுத்து, சிறைக்கு செல்லும் படி கூறினர். அதனால், ஆவேசமடைந்த இருவரும், போலீசாரை தகாத வார்த்தை களால் பேசி, கையில் கிடைத்த பொருட்களை, அவர்கள் மீது வீசி தாக்கினர்.

இதில், பெண் போலீஸ் சாவித்திரிக்கு, கண் அருகே காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறை அதிகாரிகள், புழல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சிறை கைதிகளுக்குவாடகையில் மொபைல் போன்


சென்னை புழல் மத்திய சிறையில், சிறை போலீசாரின் சோதனையின் போது, குளியல் சோப்பில் மறைத்து வைத்திருந்த, 'பேசிக்' மாடல் மொபைல் போன் சிக்கியது. அதை மறைத்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த கைதி தினேஷ், 33 என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த போனை அங்கிருந்த மற்ற கைதிகள் வாடகைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. அவருடன் மேலும் ஏழு கைதிகள் மீதும் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us