ADDED : பிப் 24, 2024 10:11 PM

திருத்தணி:சித்துார் மாவட்டம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜா, 24. இவர் நேற்று முன்தினம் இரவு, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தார்; மலைக்கோவிலில் இருந்து திருத்தணி பேருந்து நிலையத்திற்கு இரவு 10:00 மணிக்கு வந்தார்.
அப்போது ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால், திருத்தணி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரவு தங்கினார்.
அதே போல் சென்னை தி.நகரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் குமரேசன், 30, என்பவரும் கோவிலுக்கு வந்து, இரவில் சென்னைக்கு பேருந்து இல்லாததால் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தார். இருவரும் மொபைல் போன்களை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு துாங்கினர்.
அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து பார்த்த போது, இருவரின் மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இவை குறித்து இருவரும் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின்படி திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி வழக்கு பதிந்து, தனியார் மண்டபத்தில் பதிவாகியிருந்த 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து, மொபைல் போன்களை திருடிய, திருத்தணி அடுத்த எல்.என்.கண்டிகையைச் சேர்ந்த தரண் சாய், 26, என்பவரை கைது செய்து, போன்களை பறிமுதல் செய்தார்.