Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடில் விசைப் படகுகளை கண்காணிக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

பழவேற்காடில் விசைப் படகுகளை கண்காணிக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

பழவேற்காடில் விசைப் படகுகளை கண்காணிக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

பழவேற்காடில் விசைப் படகுகளை கண்காணிக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 13, 2025 08:08 PM


Google News
பழவேற்காடு:பழவேற்காடு பகுதியில் எல்லை தாண்டும் வெளிமாவட்ட விசைப் படகுகளால், உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிப்பதுடன், ஆண்டுதோறும் பதற்றமான சூழல் ஏற்படுவதால், அவற்றை கண்காணிக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழவேற்காடு மீனவப் பகுதியில், 15 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகளில், 8 - 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

பழவேற்காடு கடற்கரை அருகிலும், மேற்கண்ட பைபர் படகுகள் தொழில் செய்யும் இடங்களிலும், விசைப்படகுகள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

அவை, கடற்கரையில் இருந்து, 10 - 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு அப்பால், தொழில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு அருகில் மீன்பிடி தொழில் செய்வதால், அவ்வப்போது பதற்றமான சூழல் ஏற்படுகிறது.

கடந்தாண்டு மீன்பிடி தடைகாலம் முடிந்த பின், ஜூன் மாதம் வெளிமாவட்ட விசைப்படகுகள், பழவேற்காடு கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்தன.

அதை கேட்ட பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில், பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் படகுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

கட்டுப்பாடுகளை மீறிய வெளிமாவட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை, பழவேற்காடு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

காவல், வருவாய், மீன்வளத் துறையினர், பழவேற்காடு பகுதி மீனவர்களுடன் பேச்சு நடத்தி, வெளிமாவட்ட விசைப்படகுகள், பழவேற்காடு பகுதியில் மீன்பிடி தொழில் செய்வதை தடுக்க, அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்தனர்.

கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில், இப்பிரச்னையால் பழவேற்காடில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த ஆண்டிற்கான, 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது. இன்று நள்ளிரவு முதல், விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல உள்ளன.

கடந்தாண்டை போல, நடப்பாண்டும் வெளிமாவட்ட விசைப்படகுகள், பழவேற்காடில் பைபர் படகுகள் மீன்பிடி தொழில் செய்யும் பகுதிகளுக்கு வருவதை தடுக்க, மீன்வளத் துறை முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக, கடந்தாண்டே அந்தந்த பகுதி மீன்வளத் துறை அதிகாரிகள் வாயிலாக விசைப்படகு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, எந்த பிரச்னையும் இல்லை. மீண்டும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். கடலோர காவல் படை மற்றும் மீன்வளத் துறை வாயிலாக தொடர் கண்காணிப்பும் இருக்கும்.

- மீன்வளத் துறை அதிகாரி,

திருவள்ளூர்.

கடற்கரை அருகே விசைப்படகுகள் வருவதால், நாங்கள் விரித்து வைத்திருக்கும் மீன்பிடி வலைகள் சேதமடைகின்றன. உள்ளூர் மீனவர்களின் தொழில் பாதிக்கிறது. தேவையற்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கடந்தாண்டை போல, பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க, முன்கூட்டியே மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மீனவர்கள்,

பழவேற்காடு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us