ADDED : பிப் 05, 2024 11:30 PM

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய சேர்மன் ரஞ்சிதா தலைமையில் நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. பின், மீதமுள்ள தீர்மானங்களை படிக்க முயன்ற போது, அ.தி.மு.க., வை சேர்ந்த 3 பெண் கவுன்சிலர்கள் உட்பட 6 கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில், ஆண் கவுன்சிலர்கள் தரையில் படுத்தும், பெண் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்தும், கடந்த ஓராண்டு காலமாக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாததை கண்டிக்கிறோம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கவுன்சிலர்களை சமரசம் செய்தனர்.