Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஹோட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,200க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

ஹோட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,200க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

ஹோட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,200க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

ஹோட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,200க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

ADDED : செப் 01, 2025 01:21 AM


Google News
திருவாலங்காடு:வணிக சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டிய ஹோட்டல், டீ கடைகளில், வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வெளிச்சந்தையில் வீட்டு உபயோக சிலிண்டர், 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உட்பட ஒன்பது தாலுக்காக்கள் உள்ளன. இங்கு ஹோட்டல், டீக்கடை என, 35,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலையோரத்தில், 4,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் பெரும்பாலும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டு பயன்பாட்டிற்கு, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. தமிழகத்தில், கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாதம் வணிக சிலிண்டர், 1,823.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலை 34.50 ரூபாய் குறைந்து, 1,789 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தொழில் சம்பந்தமான சமையல் பயன்பாட்டிற்கு, வணிக சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள், டீக்கடைகளில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை, சிலர் அதிக பணத்திற்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதால், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர் சோதனை மேற்கொள்ள வேண்டும்
வீட்டு உபயோக சிலிண்டர்களை, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. வட்ட வழங்கல் துறையினர் அலட்சியமாக செயல்படுவதால் ஹோட்டல், டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. தற்போது, வெளிச்சந்தையில் வீட்டு உபயோக சிலிண்டர் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டால் மட்டுமே தடுக்க முடியும். - எல்.லோகநாதன், சமூக ஆர்வலர், திருவள்ளூர்.



பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை பாயும்
புகார் வரும் இடங்களில் மட்டும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகின்றனர். வணிக பயன்பாட்டிற்கு வீட்டு சிலிண்டரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், சிலிண்டரை பறிமுதல் செய்கிறோம். சிலிண்டர்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும். - வட்ட வழங்கல் துறை அதிகாரி, திருவள்ளூர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us