/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாகசாலை கொசஸ்தலையில் பாலப்பணி டிசம்பருக்குள் பயனுக்கு வருமா? பாகசாலை கொசஸ்தலையில் பாலப்பணி டிசம்பருக்குள் பயனுக்கு வருமா?
பாகசாலை கொசஸ்தலையில் பாலப்பணி டிசம்பருக்குள் பயனுக்கு வருமா?
பாகசாலை கொசஸ்தலையில் பாலப்பணி டிசம்பருக்குள் பயனுக்கு வருமா?
பாகசாலை கொசஸ்தலையில் பாலப்பணி டிசம்பருக்குள் பயனுக்கு வருமா?
ADDED : ஜூலை 17, 2024 12:36 AM

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலை, ஒரத்துார் -பாகசாலை இடையே கொசஸ்தலையாறு செல்கிறது.
இங்கு, ஆற்றின் குறுக்கே, 300 மீட்டர் நீளமும், 5 அடி உயரத்திற்கு தரைப்பாலம், 1998ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் மாநில நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டது.
இந்த தரைப்பாலம் வழியாக, சின்னம்மாபேட்டை, ஒரத்தூர், பொன்னாங்குளம், மணவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்து மற்றும் வாகனங்கள் வாயிலாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்று நீர் தரைப்பாலத்தை கடந்து செல்லும். அப்போது மேற்கண்ட பகுதி மக்கள் வேலை, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, பி.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம் செல்ல முடியாமல் குறைந்தது 12 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் கடந்த 2019, 2021, 2022, 2023ம் ஆண்டில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தரைப்பாலம் சேதமடைந்தது. தொடர்ந்து 20 - -30 நாட்கள் வரை தரைப்பாலத்தை கடந்து நீர் சென்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மேலும் தரைப்பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் தரைப்பாலம் பலமிழந்து உடையும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள், அப்பகுதிவாசிகள் அச்சமடைந்தனர்.
எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் பலமிழந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பாகசாலை கொசஸ்தலையாற்றில் நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் வாயிலாக, 19 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணி துவங்கியது. இதையடுத்து, 240 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 22.8 மீட்டர் இடைவெளியில் 10 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதத்திற்கு முன் பாலப்பணி வேகம் குறைந்து ஜவ்வாக இழுத்த நிலையில் தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆற்றை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் உயர்மட்டபாலப்பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.