ADDED : ஜூன் 12, 2024 02:13 AM
கனகம்மாசத்திரம்:பூண்டி ஒன்றியம் குப்பத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் யுனேஷ், 18, இவர் திருத்தணி அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். நேற்று முன்தினம் பனப்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு டூ --- வீலரில் சென்றார்.
திருமண நிகழ்வு முடிந்து வீடு திரும்பும்போது, பனம்பாக்கம் மெயின்ரோடில் மது அருந்தி கொண்டிருந்த நான்கு பேர் கும்பல் யுனேஷிடம் தகராறு செய்து, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர்.
பின் யுனேஷ் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் மொபைல்போனை பறித்து தப்பிச் சென்றது.
காயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யுனேஷ் அளித்த புகாரின் படி கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் 25, ஆந்திர மாநிலம் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த திவாகர், 19 இருவரை கைது செய்து சிறையில் அடைத்த கனகம்மாசத்திரம் போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.