ADDED : ஜூலை 24, 2024 01:51 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பொன்னாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் மகன் ஜோதிராமன், 11. இவர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாட சென்றபோது அதிக விஷம் கொண்ட கருந்தேள் கொட்டியுள்ளது.
பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்கு பின் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜோதிராமன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேள் கொட்டி உயிரிழப்பு ஏற்படுவது அரிதானது. உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதே இறப்பிற்கு காரணம் என இறந்த சிறுவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில்,' திருவள்ளூர் மருத்துவமனையில் விஷ முறிப்பு மருந்துகள் போதுமான அளவு உள்ளது. பற்றாக்குறை இல்லை. தேள் கொட்டியதில் விஷத்தின் தன்மை அதிகம் இருந்திருக்கலாம். அதனால் பக்கவிளைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். உரிய நேரத்தில் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். உடற்கூறாய்வுக்கு பின் முழு தகவல் தெரியவரும்' என்றார்.