ADDED : ஜூன் 29, 2024 09:42 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 34. இவர் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் திருத்தணி நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பணியில் இருந்த போது சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரி அருகே ரோந்து வாகனத்தை சாலையோரம் நிறுத்தி இருந்தார்.
அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஒரு இரு சக்கர வாகனம் ரவி மீது மோதியது. இதில் ரவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சக போலீசார் அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.