Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வெள்ளப்பெருக்கின் போது குவிந்த மணல் சோமஞ்சேரியில் இரவு நேரத்தில் கொள்ளை

வெள்ளப்பெருக்கின் போது குவிந்த மணல் சோமஞ்சேரியில் இரவு நேரத்தில் கொள்ளை

வெள்ளப்பெருக்கின் போது குவிந்த மணல் சோமஞ்சேரியில் இரவு நேரத்தில் கொள்ளை

வெள்ளப்பெருக்கின் போது குவிந்த மணல் சோமஞ்சேரியில் இரவு நேரத்தில் கொள்ளை

ADDED : ஜூன் 20, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி:பொன்னேரி அடுத்த சோமஞ்சேரி கிராமத்தின் அருகில் ஆரணி ஆறு பயணிக்கிறது. கடந்த ஆண்டு, டிசம்பர் பெய்த மழையின்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்து, ஆற்று நீர் சோமஞ்சேரி கிராமத்தினை மூழ்கடித்தது.

கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீருடன் ஆற்றுமணலும் வெளியேறி தனியார் விவசாய நிலங்களில் குவிந்தது. அங்குள்ள, 10 ஏக்கர் பரப்பில் இவை குவிந்து கிடந்த நிலையில், தற்போது அவை இரவு நேரங்களில் டிராக்டர்களில் அள்ளப்படுகிறது.

அருகில் உள்ள கிராமங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, டிராக்டர் 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரவு நேரங்களில் நடைபெறும் இந்த மணல் கொள்ளை குறித்து உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை இன்றி கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆவடி கமிஷனரகத்துடன் காட்டூர் காவல் நிலையம் இணைக்கப்பட்டபோது, தினமும், 5 -6 போலீசார் சோமஞ்சேரி, ரெட்டிப்பாளையம் கிராமங்களில் ரோந்து வந்து செல்வர். மேற்கண்ட தனியார் நிலத்தில் மணல் திருடத் தொடங்கிய நாள் முதல், போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டனர்.

ஒரு டிராக்டருக்கு தினமும் 8,000 -10,000 ரூபாய் வரை காவல் நிலையத்திற்கு மாமூல் கொடுக்கப்படுகிறது. எத்தனை டிராக்டர் ஓடுகிறோ அதற்கு ஏற்ப காவல் நிலைய அதிகாரிகளுக்கு கப்பம் கட்டப்படுகிறது. அதனால் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

ஆற்றில் இருந்து தண்ணீருடன் வெளியேறி, தனியார் நிலத்தில் குவிந்த மணலை, ஏன் அரசாங்கம் கையகப்படுத்தவில்லை.

மேற்கண்ட நிலங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மணல் குவிந்து இருக்கும். உரிய ஆய்வு மேற்கொண்டால், அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரிகளுக்கு உரிய கவனிப்பு இருப்பதால், அதுகுறித்து யாரும் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர்.

சோமஞ்சேரி மட்டுமின்றி, காட்டூர், வேலுார் ஆகிய கிராமங்களிலும், நீர்நிலைகளில் இரவு நேரங்களில் மணல், சவுடுமண் திருடப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us