/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள் செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்
ADDED : ஜூன் 20, 2024 01:09 AM

பூந்தமல்லி:செம்பரம்பாக்கம் ஏரிக்கு உணவு தேடி ஏராளமான பறவைகள் படை எடுத்துவரும் நிலையில், ஏரியின் மேற்புற பகுதியில் பறவைகள் கூடு கட்டி தங்க ஏதுவாக, மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியின் மேற்புற பகுதி பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம், மேவளூர்குப்பம், தண்டலம், கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
இந்த பகுதிகளில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த பகுதியில் உணவு தேடி, ஏராளமான பறவைகள் வருகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பறவைகளின் புகலிடமாக மாறி வருகிறது.
எனவே, இங்கு பறவைகள் தங்கி, கூண்டு கட்டுவதற்கு ஏதுவான மர வகைகளை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரி. பல பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது.
இந்த ஏரியில் கிடைக்கும் மீன், நத்தை, நண்டு, தவளை, புழு உள்ளிட்டவற்றை உண்ண நீர்க்கோழி, கொக்கு, நாரை ஆகியவை ஏராளமாக வருகின்றன.
மேலும், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை கூழைக்கடா உள்ளிட்ட சில வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் உணவு தேடி இங்கு வருகின்றன.
ஏரியை ஒட்டி ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. இங்கு சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை அகற்றிவிட்டு, பறவைகளை ஈர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான நாட்டு வகை மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இதனால், பல பறவைகள் பயனடையும்; சுற்றுச்சூழல் மாசும் குறையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.