Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பின்றி சேதமாகும் பூண்டி நீர்த்தேக்க கரை

பராமரிப்பின்றி சேதமாகும் பூண்டி நீர்த்தேக்க கரை

பராமரிப்பின்றி சேதமாகும் பூண்டி நீர்த்தேக்க கரை

பராமரிப்பின்றி சேதமாகும் பூண்டி நீர்த்தேக்க கரை

ADDED : ஜூன் 25, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர், முறையாக பராமரிக்காததால், பூண்டியில் வறண்டு வரும் நீர்த்தேக்க கரைகள் படிப்படியாக சேதமடைந்து வருகின்றன.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும்.

இங்கு, மழை காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், பூண்டி நீர்தேக்கத்திற்கு மழைநீர் வரத்து குறைவாகவே உள்ளது. நீர்த்தேக்கத்தில் தற்போது, 0.76 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் இதே நாளில், 1.40 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீர் அளவு குறைந்து விட்டதால், நீர்தேக்கத்தின் உட்பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சேதமடைந்து வருகிறது. வரும் மழைக்காலத்தில் கூடுதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது, சேதமடைந்த ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணி துறை - நீர்வள ஆதாரம், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த நீர்த்தேக்கத்தின் உட்பகுதி கரையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒதப்பை பகுதியில், 2.64 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட கிருஷ்ணா கால்வாய் தற்போது சரிந்து விழுந்துள்ளது. தரமற்ற பணிகளால் சிறு மழை பெய்தாலே கரைகள் சேதம் அடைகின்றன. மக்களின் வரிப்பணம் பல கோடி வீணாகி வருவது வேதனைக்குரியது.

மழைக்காலம் துவங்கும் முன், ஒதப்பை பகுதியில் கிருஷ்ணா கால்வாய் பகுதி சரிந்துள்ள இடத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us