ADDED : ஜன 04, 2024 09:05 PM
திருநெல்வேலி;திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கீழ்தள முன்புற வாசலில், நேற்று முன் தினம் காலை கண்ணாடி விரியன் பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. அதைப் பார்த்து பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அலறினர். தகவல் அறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் வந்தனர். பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கலெக்டர் அலுவலகத்துக்கு தொடர்ந்து பாம்புகள் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரிக்கையாளர் மன்றம், பல்வேறு அலுவலக பிரிவுகளில் பாம்புகள் ஏதாவது உள்ளனவா என்று தேடுதல் வேட்டை நடத்தினர்.