/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாஞ்சோலையை இயற்கை வனமாக மாற்ற வழக்கு மாஞ்சோலையை இயற்கை வனமாக மாற்ற வழக்கு
மாஞ்சோலையை இயற்கை வனமாக மாற்ற வழக்கு
மாஞ்சோலையை இயற்கை வனமாக மாற்ற வழக்கு
மாஞ்சோலையை இயற்கை வனமாக மாற்ற வழக்கு
ADDED : ஜூலை 20, 2024 01:18 AM

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை இயற்கை வனமாக மாற்ற உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் நிறுவனர் வைகை ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாஞ்சோலையில் 8373.57 ஏக்கர் நிலத்தை அரசிடம் 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' (பி.பி.டி.சி.,) நிறுவனம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கி நிர்வகிக்கிறது. தேயிலை பயிரிடப்படுகிறது. குத்தகை காலம் 2028ல் முடிகிறது. அந்நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது. அது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் வருகிறது.
எஸ்டேட்டை மூட மற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை நிறுவனம் அறிவித்தது. அத்தொழிலாளர்களை தமிழக அரசின் டான்டீ நிறுவன தேயிலை தோட்ட பணியில் ஈடுபடுத்தி மறுவாழ்வு அளிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அகஸ்தியர் மலை உயிர்கோள காப்பகத்தில் 14 ஆறுகள் உள்ளன. அவை இறுதியில் தாமிரபரணி ஆறாக மாறி திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட நீராதாரமாக திகழ்கிறது.
தேயிலை பயிரிட ரசாயன பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வனத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. மாஞ்சோலையில் தேயிலை மற்றும் பிற வணிக நடவடிக்கைளுக்கான குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை பாதுகாக்க வேண்டும்.
பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டு ஏற்கனவே இருந்ததுபோல் இயற்கை வனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு: மாஞ்சோலை தொடர்பான இதர வழக்குகளுடன் சேர்த்து இதை ஜூலை 22 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.