ADDED : ஜன 07, 2024 07:11 AM

போடி: போடி கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போடி, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் 3 நாட்களாக இரவில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆற்றோர பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
போடி பகுதியில் உள்ள பங்காருசாமி, மீனாட்சியம்மன் கண்மாய் புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்த நிலையில் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணையில் தடுப்பணையை தாண்டி வெள்ளியை உருகி விட்டார் போல நீர் பெருக்கெடுத்து அருவியாய் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மக்களும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.