/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூலிகைச் செடி, மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு மூலிகைச் செடி, மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு
மூலிகைச் செடி, மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு
மூலிகைச் செடி, மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு
மூலிகைச் செடி, மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு
ADDED : செப் 15, 2025 05:50 AM

''சின்னமனுார் நகராட்சியை சுற்றுப் புறச் சூழல் பாதிப்பில் இருந்து மீட்க நகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும், வீடுகளில் காய்கறி, பழச்செடிகள், மூலிகை செடிகள் வளர்க்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.'' என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகரைச் சுற்றி 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடியாகிறது. உடைய குளம், செங்குளம் உள்ளன. நகரில் சேகரமாகும் சாக்கடை நீர், செப்டிக் டேங்க் கழிவுகள், கோழி, இறைச்சி கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக் குப்பை, உடைந்த பாட்டில்கள் என அனைத்தும் சின்ன வாய்க்கால் வழியாக உடைய குளத்தில் சேகரமாகிறது.
பாசனத்திற்கு என வரும் ஆற்று நீரும், சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகளும் ஒன்று சேர்வதால் கண்மாய் நீர் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. ஒன்றிய அலுவலகம் சார்பில் மரக்கன்றுகளை வளர்த்து நடவு செய்து வருகின்றனர். இதன் மூலம் பசுமைப் பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறுங்காடு அமைப்பு: மணிகண்டன், இயற்கை ஆர்வலர்: சுற்றுப்புறச் சூழல் மாசு படாமல் இருக்கவும், மழை வளம் கிடைக்கவும் சின்னமனுார் நகரின் 4 திசைகளிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஓட்டல்கள் கடைகளில் பிளாஸ்டிக், பாலிதீன் ஒழிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குறுங்காடு நகரில் பல இடங்களில் உருவாக்க வேண்டும். ஏற்கனவே அரசு மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குறுங்காடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி சந்தை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். உடைய குளத்தை துார்வார வேண்டும். குளத்தில் தேங்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும்., என்றார்.
விழிப்புணர்வு அவசியம் பாலசுப்ரமணியன், சின்னமனுார்: ரோட்டரி கிளப், வனத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்துள்ளனர். பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து வீடுகளில் மூலிகைத் தோட்டம் ஏற்படுத்த வேண்டும். காடுகளை அதிகரிக்க வேண்டும். காடுகள் குறுகியதால் வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.
இதை தவிர்க்க வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்திட வேண்டும்.
பசுமை சின்னமனுார் உருவாக்க பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் வகுப்புக்கள் தினமும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகருக்குள் இடம் இல்லாவிட்டாலும், நகரை சுற்றி கண்மாய் கரைகள், மேகமலை ரோடு, முத்துலாபுரம் ரோடு, சீலையம்பட்டி ரோடுகளில் மரங்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
குறிப்பாக வீடுகளில் செடி கொடிகள், மூலிகை செடிகள் வளர்க்க வேண்டும்., என்றார்.