ADDED : ஆக 02, 2024 06:52 AM
ஆண்டிபட்டி: அரண்மனைபுதூர் அருகே முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ் 21, இவரது அண்ணன் விக்னேஷ் 22, பெற்றோரை இழந்த இவர்கள் தற்போது பெரியம்மாவுடன் ராஜதானி அருகே வேல்சாமிபுரத்தில் தங்கி விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர். ஜூலை 24ல் விக்னேஷ் தன்னை வண்டு கடித்து விட்டதாக தம்பியிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்துள்ளனர்.
வீட்டுக்கு வந்ததும் திரும்பவும் உடல்நிலை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விக்னேஷ் விஷம் குடித்துள்ளதாக சிகிச்சை அளித்த டாக்டர் தகவல் கூறியுள்ளார்.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த விக்னேஷ் பலனின்றி இறந்தார். சதீஷ் புகாரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.