/உள்ளூர் செய்திகள்/தேனி/ உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி 10கி.மீ., டோலியில் துாக்கி வந்த அவலம் உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி 10கி.மீ., டோலியில் துாக்கி வந்த அவலம்
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி 10கி.மீ., டோலியில் துாக்கி வந்த அவலம்
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி 10கி.மீ., டோலியில் துாக்கி வந்த அவலம்
உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி 10கி.மீ., டோலியில் துாக்கி வந்த அவலம்
ADDED : ஜூன் 01, 2024 05:17 AM

மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் பரப்பியாறு குடியில் உடல் நிலை பாதித்த மூதாட்டியை பத்து கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.
மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் அடர்ந்த வனத்தில் 24 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர்.
அங்குள்ள பரப்பியாறுகுடியில் மர்ம காய்ச்சலால் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர் சகில் ரவீந்திரன் தலைமையில் மருத்துவ குழு இரு தினங்களுக்கு முன்பு சென்றனர். அப்பகுதிக்கு ரோடு வசதி இல்லாத நிலையில், மழையால் பரப்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனால் அங்கு மருத்துவ குழுவினர் தங்கி சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் கட்டுக்குள் வந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சடையன் மனைவி சிலம்பாயி 64,க்கு இதயம் தொடர்பான நோய் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டது.
அதற்கு உடனடியாக சிகிச்சை தேவை பட்டதால் அவரை மருத்துவ மனையில் அனுமதிக்க மருத்துவ குழு முடிவு செய்தனர்.
பரப்பியாறுகுடியில் இருந்து நேற்று காலை 7:30 மணிக்கு சிலம்பாயியை டோலி மூலம் தூக்கிக் கொண்டு பத்து கி.மீ., தூரம் கரடு, முரடான பாதை, பரப்பியாறு ஆகியவற்றை கடந்து மதியம் கேப்பைகாடு பகுதிக்கு வந்தனர்.
அங்கிருந்து ஜீப் மூலம் ராஜமலை பெட்டிமுடி கொண்டு வரப்பட்டு அதன் பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் 60 கி.மீ., தொலைவில் உள்ள அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உரிய மருத்துவ வசதி இல்லாததால் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.