ADDED : ஜூலை 24, 2024 06:06 AM
மூணாறு : கொட்டாரக்கரா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குமுளியை அருகே 66ம் மைல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு ஓடிக் கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது. காரில் டிரைவர் மட்டும் இருந்தார். அப்போது அந்த வழியில் கோட்டயத்தில் இருந்து குமுளி வந்த கேரள அரசு பஸ்சில் இருந்த பயணிகள் தீயை அணைக்க முயன்றதுடன் டிரைவரை மீட்க முயற்சித்தனர். அவர் ' சீட் பெல்ட்' அணிந்து இருந்ததால் மீட்க இயலவில்லை. இதனிடையே தீ வேகமாக பரவி கார் முற்றிலும் எரிந்தது. காரில் இருந்தவர் உடல் கருகி இறந்தார். குமுளியில் இருந்து டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் தீயை அணைத்தனர்.
அடையாளம் தெரிந்தது: சம்பவத்தின் போது இறந்தவர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவில்லை. அவர் குமுளியைச் சேர்ந்த ரோய் செபாஸ்டியன் 67, என நேற்று அடையாளம் தெரிந்தது.