ADDED : ஜூலை 30, 2024 06:05 AM
மூணாறு: மூணாறு அருகே தெருநாய் கடித்து நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மூணாறு நகரிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகம் நடமாடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எதுவும் அதிகாரிகள் எடுக்காததால் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மூணாறு அருகே நல்ல தண்ணி எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் ஒருவரை கடித்த தெருநாய், ஐ.டி.டி. பகுதியில் ஒருவரை கடித்தது.
இந்த நாய் கல்லார் எஸ்டேட் பகுதியில் இரு பெண்களை கடித்தது. அதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மூணாறில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில் தேவிகுளம் சமூக சுகாதார நிலையம், பத்து கி.மீ., தொலைவில் சித்திராபுரம் சுகாதார மையம் ஆகியவை உள்ளன.
அவற்றில் நாய் கடிக்கு தடுப்பூசி மருந்து இல்லாததால் 30 கி.மீ., தொலைவில் உள்ள அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகின்றது.
அதனால் தேவிகுளம், சித்திராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் நாய் கடிக்கு தேவையான மருந்துகளை இருப்பு வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.