ADDED : ஜூன் 06, 2024 11:03 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைகோட்டை பகுதியை சேர்ந்த சரிதா,45, இவரின் மகள் திருமணம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு சரிதா தனது அண்ணன் முருகனாந்தம் என்பவரை அழைத்துக்கொண்டு, உறவினர்கள் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வைத்துவிட்டு மீண்டும் இருவரும் ஊருக்கு திரும்பினார்.
அப்போது, மழை பெய்ததால், அப்போது கண்ணந்தங்குடி மேலையூர் வண்டி பாலம் பகுதியில், சாலை ஓரம் இருந்த தூங்கு மூஞ்சி மரத்தில் சிலர் நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து சரிதாவும், முருகனாந்தமும் மழைக்காக ஒதுங்கினர்.
இந்நிலையில், மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் நின்றுக்கொண்டிருந்த சரிதா சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். இதில் சரிதாவின் அண்ணன் முருகனாந்தம், சங்கர் சேகரன், சீதாலட்சுமி உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஒரத்தநாடு போலீசார் விசாரிக்கின்றனர். மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.