Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பற்றாக்குறை கால்நடை மருத்துவமனையில் பணியாளர்கள் புதுக்கட்டடத்தில் தண்ணீர் துளியும் இல்லை

பற்றாக்குறை கால்நடை மருத்துவமனையில் பணியாளர்கள் புதுக்கட்டடத்தில் தண்ணீர் துளியும் இல்லை

பற்றாக்குறை கால்நடை மருத்துவமனையில் பணியாளர்கள் புதுக்கட்டடத்தில் தண்ணீர் துளியும் இல்லை

பற்றாக்குறை கால்நடை மருத்துவமனையில் பணியாளர்கள் புதுக்கட்டடத்தில் தண்ணீர் துளியும் இல்லை

ADDED : ஜூலை 03, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
தேவகோட்டை: கால்நடை மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் முன் பக்க கதவு மூடப்பட்டு டாக்டர் ஒருவர் மட்டுமே சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது.

தேவகோட்டையில் கண்டதேவி ரோட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டு கட்டடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனைக்கு 2021 ல் ரூ. 35 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. டாக்டர்கள் அறை உட்பட ஐந்து அறைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூட்டல் திட்ட மையமும் உள்ளது. அனைத்து வசதிகள் இருந்தும் பயனில்லை .

புதிதாக கட்டப்பட்ட கட்டடம் உள்புறமாக பூட்டி இருக்கிறது.மருத்துவமனை முன்புற கேட் திறக்காமல் முட்செடி மண்டி கிடக்கிறது.புதிதாக வருபவர்கள் மருத்துவமனை பூட்டி இருப்பதாக கருதி திரும்பி செல்கின்றனர்.

நகரில் உள்ள நாய், கோழிகள் , ஆடு மாடுகளுக்கு மட்டுமின்றி சுற்றியுள்ள 80 கிராமங்களில் உள்ள கால்நடைகளும் இங்குள்ள மருத்துவமனைக்கு தான் வரவேண்டும்.

பின்னால் திறந்து இருந்த நிலையில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்தார். இந்த மருத்துவமனைக்கு இரண்டு பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் இரண்டு பணியிடமும் காலியாக உள்ளது. 15 தினங்களுக்கு ஒருவர் வேறு மருத்துவமனையில் இருந்து தற்காலிகமாக வந்து செல்கிறார்.

தினமும் சராசரியாக 50 பேருக்கு குறையாமல் கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

சனிக்கிழமை மட்டும் தடுப்பூசி போடுவதால் கால்நடைகள் வருவது கூடுதலாக இருக்கும் என்கின்றனர். டாக்டர் பரிசோதனை செய்யும் போது உதவியாளர் இல்லாதது சிரமமாக உள்ளது. கால்நடைகளை அழைத்து வருபவர்களே அவருக்கு உதவி செய்ய வேண்டிய நிலை. பெரும்பாலும் மாடு , ஆடுகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ள சூழலில் டாக்டர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்றே சிகிச்சை அளிக்கிறார். அப்போது மருத்துவமனையை பாதுகாக்க ஊழியர்கள் இல்லை. மருத்துவமனை பின்புறமாக சென்று தான் சிகிச்சை பெற வேண்டும். முன்புறம் உள்ள கதவு மருந்து வரும் போது தான் திறக்கப்படுகிறது.

தண்ணீரின்றி தவிப்பு:

கட்டடம் கட்டி , மருத்துவமனை வளாகம் பெரிய அளவில் இருந்தும் தண்ணீர் வசதி இல்லை. பணியாளர்களே வீடுகளில் இருந்து தண்ணீர் வருகிறார்கள். தொட்டிகள் இருந்தும் தண்ணீர் வசதி இல்லை. ஆடு, மாடுகள் குடிப்பதற்கும், சில நேரங்களில் ஆடு மாடுகளை கழுவுவதற்கும் ஒரு துளி தண்ணீர் இல்லாமல் மருத்துவரும், கால்நடைகளை அழைத்து வருபவர்களும் அவதிக்குள்ளாகினர்.

அரசு உடனடியாக நிரந்தர பணியாளர்கள், அவசர பணியாக தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us