ADDED : ஜன 29, 2024 05:42 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் மெகா சைஸ் மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
அ.காளாப்பூர் ஊராட்சியில் சிறுசித்த கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்தது. கிராம பிரமுகர்கள் துண்டு வீசி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
கரையில் கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி சேலை, வலை, ஊத்தா உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
கெளுத்தி, குறவை, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் கிடைத்தது. பலருக்கும் 2 முதல் 5 கிலோ வரை எடையுள்ள பெரிய மீன்கள் கிடைத்தது.
சிறிய வகை மீன்களும் ஏராளமாக கிடைத்ததால் மக்கள் கூடைகளில் அள்ளிச்சென்றனர். பலர் தங்கள் உபயோகத்திற்கு போக மீதியை நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
இதனால் நேற்று அப்பகுதி வீடுகளில் மீன் குழம்பு வாசனை அதிகரித்து காணப்பட்டன.