ADDED : ஜூன் 19, 2024 06:28 AM
ஏற்காடு : ஏற்காடு, பெரியேடுக்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி, 42.
தோட்ட தொழில் செய்து வரும் இவர் நேற்று இரவு, 8:00 மணியளவில் தனது கிராமத்தில் இருந்து, அருகில் உள்ள நல்லுாரில் உள்ள மாமனார் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மின் கம்பத்தில் இருந்து, மின்சார கம்பி அறுந்து ஆண்டி மீது விழுந்தது. இதில் அவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை ஆப் செய்து விட்டு, ஆண்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். சிறிது துாரம் சென்ற நிலையில், அவர் இறந்ததை அறிந்த ஊர் மக்கள், ஆண்டியின் உடலை நல்லுார் ஊர் மந்தையில் வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏற்காடு போலீசார் ஆண்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.