Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

200 லிட்டர் சாராயம் பறிமுதல்: 8 பேர் கைது: மலை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

ADDED : ஜூன் 22, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
ஆத்துார் : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்திய, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுதும் சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்களாக, தலைவாசல், வீரகனுார் போலீசார், ஆத்துார் மதுவிலக்கு போலீசார், தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்துார் மதுவிலக்கு போலீசார் ஆய்வின்போது கல்வராயன்மலை, கோவில்புத்துார் பழனிசாமி, 40, கீழ் ஆவாரை தேவராஜ், 34, வரகூர் ராமர், 55, நாவக்குறிச்சி பெரியசாமி, 32, ஊனத்துார் அருள்மணி, 29, அல்லிமுத்து, 60, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், தலா, 20 முதல், 30 லிட்டர் என, 190 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தலைவாசல் போலீசார் ஆய்வில் கோவிந்தம்பாளையத்தில் கலியமூர்த்தி, 50, மணிவிழுந்தான் சிவசந்திரன், 36, ஆகியோரை கைது செய்தனர். கோவிந்தபாளையத்தில், சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூரை சேர்ந்த, சிவா, 33, பைக், சாராயத்தை போட்டுவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர். இவர்களிடம், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வீரகனுார் போலீசார், வேப்பம்பூண்டி ராசாத்தி, 57, என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆத்துார் சப்-டிவிஷன் முழுதும் சாராயம் விற்பனையை தடுக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்வராயன்மலை பாதைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணி நடக்கிறது' என்றனர்.

ஊறல் அழிப்பு

சங்ககிரி, பரையங்காட்டானுாரில், டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் காய்ச்ச, 100 லிட்டர் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதை கொட்டி அழித்தனர். ஊறல் போட்ட, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 65, என்பவரை கைது செய்தனர்.

எச்சரிக்கை

புழுதிக்குட்டை, புங்கமடுவு, பெரியகுட்டி மடுவு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற, 4 பேரை, நேற்று காலை, 9:00 மணிக்கு வாழப்பாடி ஸ்டேஷனுக்கு, போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, 'இனி கள்ளச்சாராயம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தனர். அதேபோல் மலைப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

சந்துக்கடை மீது நடவடிக்கை

மேட்டூரில் சப் - கலெக்டர் பொன்மணி தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. அதில் கொளத்துார் காவிரி கரையோரம், மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம், ஏமனுார், கர்நாடகா மாநிலம், கோபிநத்தம் பகுதியில் இருந்து கள்ளச்சாராய பாக்கெட்டுகளை, பரிசலில் கொளத்துார் பகுதி கிராமங்களுக்கு கடத்துவதாக, வி.ஏ.ஓ.,க்கள் கூறினர். அவ்வாறு கள்ளச்சாராயம் கடத்துவோர், விற்போர், கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக சந்துக்கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த கடைகளுக்கு, 'சீல்' வைக்கவும் வி.ஏ.ஓ., - போலீசாருக்கு சப் -கலெக்டர் உத்தரவிட்டார். கலால் தாசில்தார் சுமதி, கருமலைக்கூடல் போலீசார், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

அதேபோல் நங்கவள்ளி எஸ்.ஐ., மாதேசன் தலைமையில் போலீசார் நேற்று, வனவாசி, நங்கவள்ளி சந்தைப்பேட்டை, விருதாசம்பட்டி, வண்டிமேடு, கீரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாராய நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர். ஜலகண்டாபுரம் போலீசார், டவுன் பஞ்சாயத்து, அதன் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

காடையாம்பட்டி தாலுகா

காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுார் ஊராட்சியில் பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. குறிப்பாக பூமரத்துார், வீராச்சியூர், கண்ணப்பாடி, சுரக்காபட்டி, கொண்டையூர், ஏற்காட்டை சேர்ந்த கொலவூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் சாராய நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் தீவட்டிப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில் போலீசார் நேற்று, பூமரத்துார், வீராச்சியூர், கணவாய்புதுார் மலை கிராமங்களில் வீடுதோறும் சென்று, மலை பகுதியில் ஊறல் போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us