ADDED : ஜூன் 28, 2024 02:11 AM
சேலம்,
சேலம், வீராணம் அருகே தாதம்பட்டியில் உள்ள தண்டவாள பகுதியில் நேற்று இரவு, 7:20 மணிக்கு, சேலம் - விருதாசலம் ரயிலில் அடிபட்டு ஒரு மூதாட்டி உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி, சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தாதம்பட்டியை சேர்ந்த முனுசாமி மனைவி குன்னியம்மாள்தேவி, 75. இவரது உறவினர், எஸ்.கே.டவுன்ஷிப்பை சேர்ந்த தனலட்சுமி, 73. இவர், தாதம்பட்டியில் உள்ள மகனை பார்க்க, குன்னியம்மாள்தேவியுடன் நடந்து வந்துள்ளார். தாதம்பட்டியில் உள்ள தண்டவாள பகுதியில் வந்தபோது, இருவரும் ரயிலில் அடிபட்டதாக தெரிகிறது. தனலட்சுமி உடலை கைப்பற்றியுள்ளோம். குன்னியம்மாள்தேவியை, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாலிபர் பலி
அதேபோல் நேற்று மாலை, 4:25 மணிக்கு ஆத்துாரில் இருந்து விருதாசலம் நோக்கி சரக்கு ரயில் சென்றது. அப்போது ஆத்துார், புதுப்பேட்டையில் ரயில்வே பாதையை கடக்க முயன்ற, 30 வயதுடைய வாலிபர் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் தலை, உடல் தனித்தனியே சிதறி வாலிபர் உயிரிழந்தார். ஆத்துார் ரயில்வே போலீசார், உடலை மீட்டு இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.