ADDED : ஜூன் 13, 2025 01:59 AM
கீழக்கரை:விழுப்புரம் மாவட்டம், பெரிய தச்சூரை சேர்ந்தவர் செல்வராஜ், 41; கட்டட தொழிலாளி. இவர், ஏர்வாடி முத்தரையர் நகரில், வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு முனியம்மாள், அபிராமி என, இரு மனைவியர் உள்ளனர்.
முதல் மனைவியின் மகன் மணிகண்டன், 22. இவருக்கும், செல்வராஜுக்கும் சொத்து பிரச்னை இருந்தது. இது தொடர்பான வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் காலை, சொத்து பிரச்னை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் செல்வராஜ் ஆஜராகி விட்டு, இரவு, 8:00 மணிக்கு வீட்டில் ஓய்வு எடுத்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், செல்வராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர்.
ஏர்வாடி போலீசார், செல்வராஜ் உடலை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மணிகண்டனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.